தமிழர் நிதி நிர்வாகம்

சங்க காலம் முதல் சமூகநீதிக் காலம் வரையிலான தமிழர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க நிதி நிர்வாகச் சித்திரத்தைத் தீட்டும் நூல்தான் 'தமிழர் நிதி நிர்வாகம்: தொன்மையும் தொடர்ச்சியும்'. பண்டைய வணிகம், வரிவிதிப்பு முறைகள், நிதிக் கொள்கைகள், காலனியக் கால நிதி நிர்வாக நடைமுறைகள், நவீனத் தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கைகள் ஆராயப்பட்டுள்ளன. அரிய தகவல்களும் தரவுகளும் நிறைந்திருக்கும் இந்நூல், பல்வேறு நூற்றாண்டுகளாகத் தமிழர் நிதி நிர்வாகம் உருவாகிவந்த வரலாற்றையும், தமிழ்நிலத்தின் பொருளாதார அடையாளம் வடிவமைக்கப்பட்ட விதத்தையும் குறித்த ஆழமான கண்ணோட்டத்தை வழங்குகிறது. தமிழர்களின் நிதி நிர்வாகத்திலும் தமிழ்ப் பண்பாடு உண்டு, தனித்துவம் உண்டு என்பதை எடுத்துரைக்கும் அழகிய ஆவணம் இது. இந்த அருந்தொகுப்புக்கான பணியின் பொருட்டு நூற்றாண்டு கால நிதிநிலை அறிக்கைகள், விரிவான திட்ட மதிப்பீடுகள், மத்திய-மாநிலத் திட்டக்குழுக்களின் தமிழ்நாடு குறித்த ஆவணங்கள், நிதிநிலை அறிக்கை தொடர்பான ஆவணங்கள், செய்திக் கட்டுரைகள், இதழ்கள், நூல்கள், ஆய்வறிக்கைகள், ஒளிப்படங்கள் ஆகியவை சேகரிக்கப்பட்டன. அவை அனைத்தும் இந்தச் சிறப்பு இணையப் பக்கம் வழியாகத் தமிழ்கூறும் நல்லுலகின் பார்வைக்கு வைக்கப்படுகின்றன. இவை, துறை சார்ந்த பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்வதற்குப் பேருதவியாக அமையும். ஆய்வாளர்களின் ஆய்வுப் பணியை எளிதாக்கும் முயற்சியாகவும் அமையும். காத்த வகுத்தலும் வல்லது அரசு!